Friday, November 30, 2007

பால் கடன்


2000 ஆம் ஆண்டு எழுதிய இந்த கவிதை தொலைந்து போய்விட்டதாய் நினைத்திருந்தேன். கிடைத்துவிட்டது. திண்ணைக்கு நன்றி.


என் மார்பின்
பால் வாசனையில்
கண்வளர்ந்தவளே!
இன்று நீ அகதியாய்
அன்னிய தேசத்தில்.
தொப்பிள் கொடி
இன்னமும் பச்சையாய்.

உன்னை நினைக்கும்
போதெல்லாம் -என்
கருப்பைச் சுவர் கூட
விம்மி எழுகிறது.

வயசு தான் போட்டுது
ஆனால் இன்னமும்
கருப்பைச்சுவர் உன்
இஸ்பரிசத்தை மறக்கவில்லை.

உன் உணர்வைச்
சுமந்து வரும் கடிதம் பார்க்க
கண் இசைவதில்லை.

உன் புகைப்படத்தை
பள்ளிக்கப்போகும் போது
உன்னை அழைத்துச்சென்ற
விரல்கள் தான் தடவிப்பார்த்து
மகிழ்ந்து கொள்கிறது.

படலைக்குள் அரவம் கேட்டால்
நீ வந்து நிற்பதாய்
ஓர் பிரமை.
பிறகென்ன கேக்கவே வேணும்.
கண்ணின் வில்லை கூட
உன் வரவுக்காய்
ஒருமுறை சுருங்கி விரியும்.

அன்று முழுவதும்
சொட்டுத் தண்ணி கூட
நாவிறங்கா.

ஊரில் எல்லோரும்
மகளின் வெளிநாட்டுக்காசில்
கிழடுக்கு உல்லாச வாழ்வு என்று
போற்றுவதாய் உமிழ்ந்து மெல்வர்.

முகம்மலர கேட்டுவிட்டு
உன் நினைவால் மனம்
பித்துப்பிடித்ததை யார் அறிவர். ?

சாவோ
என் வாசலில்
தலைவிரித்து நிர்க்கிறது.
உன் ஸ்பரிசம்பட்டால் தான்
இந்த அம்மா உயிர்போகுமம்மா.
ஓடோடி வந்து என்
பால்கடனைத்தீர்த்துவிடு.
__
நளாயினி
சுவிற்சலாந்து.
2001

nanre.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30404019&format=html

3 comments:

நாகை சிவா said...

உணர்வுப்பூர்வமான கவிதை.

ரொம்ப அருமையா இருக்கு

ராஜ நடராஜன் said...

தாய் வாசனை.அழகான கவிதை.

ரசிகன் said...

நல்லாயிருக்கு நளாயினி அக்கா..